திருப்பூர், ஜன.13: குடியிருப்பு பகுதியில் முறைகேடாக இயங்கிய சாய ஆலையை, பொதுமக்கள் முற்றுகையிட்டனர். மேலும் அச்சாய ஆலை மீது நடவடிக்கை எடுக்கவும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு பரிந்துரைத்தனர்.
திருப்பூர், வீரபாண்டி பிரிவைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (30). இவர் வெள்ளியங்காடு 2-வது வீதியில் பனியன் ஜாப் ஒர்க் நிறுவனம் நடத்தி வருகிறார். குடியிருப்புகளுக்கு இடையே அமைந்துள்ள இந்நிறுவனத்தில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக சாயமிடும் விஞ்ச் இயந்திரங்களை வைத்து, பனியன் துணிகளுக்கு சாயமிடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது.
மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் எந்தவித அனுமதியும் பெறாமலும், தொழிற்சாலைக்கான மின் இணைப்பு இல்லாமலும், வீட்டுக்கான மின் இணைப்பை பயன்படுத்தி, இச்சாய ஆலை முறைகேடாக இயங்கி வந்ததாகத் தெரிகிறது.
மேலும், சாயக் கழிவுநீரை இரவு நேரங்களில் சாக்கடை கால்வாயில் வெளியேற்றியதால் பகுதி மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து, பகுதி மக்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட பாதிப்பையடுத்து, வெள்ளிக்கிழமை பனியன் துணிகளுக்கு சாயமிட்டுக் கொண்டிருந்த இச்சாய ஆலையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். தொடர்ந்து, சாய ஆலையின் உரிமையாளர் கோவிந்தசாமி, மற்றும் ஊழியர்களையும் சிறைபிடித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த திருப்பூர் தெற்கு போலீஸôர், கோவிந்தசாமியை விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும், மாநகராட்சி நிர்வாகத்துக்கும் பொதுமக்கள் தகவல் அளித்தனர்.
ஆனால், நீண்ட நேரமாகியும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வராததால் பொதுமக்கள் கடும் ஆவேசமடைந்தனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், தொடர்ந்து 3 மாதங்களுக்கு மேலாக முறைகேடாக இயங்கி வரும் இச்சாய ஆலை குறித்து மாநகராட்சி நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால், சாய ஆலை இயங்குவதைத் தடுக்க அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால், இச்சாய ஆலையின் பின்னணி குறித்து மாவட்ட நிர்வாகம் தெளிவாக விசாரணை நடத்த வேண்டும் என்றனர். இச்சம்பவம் வெள்ளியங்காடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பகிர்வுக்கு நன்றி நண்பரே
ReplyDeleteதமிழகத்தில் போராடாமல் வாழ்வில்லை