திருப்பூர் : திருப்பூர் மின்பகிர்மான வட்டத்தில் மின்அளவீடு மீட்டர் பாக்ஸ் இருப்பு இல்லாததால், தங்களது வீடுகளுக்கு மின் இணைப்பு பெற முடியாமல் விண்ணப்பதாரர்கள் காத்திருக்கின்றனர். திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், தங்களது வீடுகளுக்கு மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்துள்ளனர்; பெரும்பாலானவர்கள் மின் இணைப்புக்கான கட்டணம் செலுத்திய நிலையில், இன்னும் மின் அளவீடு மீட்டர், மின்வாரியம தரப்பில் வழங்கப்படவில்லை. பல மாதங்களாகியும், மீட்டர் கிடைக்காமல் இருப்பதால் பலரும் ஏமாற்றத்தில் உள்ளனர்.
திருப்பூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் நிர்மலதா கேட்டபோது, ""வீடுகளுக்கு வழங்கப்படும் சிங்கிள் பேஸ் மீட்டர் இருப்பு இல்லை; சென்னையில் ஆர்டர் கொடுக்கப்பட்டுள் ளது. சென்னை தலைமை மின்வாரியத்தில் இருந்து, திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட பகுதிகளுக்கு 7,500 மீட்டர் விரைவில் வர உள்ளது. திருப்பூரில் 700 இணைப்புகளுக்கு மீட்டர் தர வேண்டும். ஒன்றரை மாதங்களாக தாமதமாகியுள்ளது. இன்னும் 10 நாட்களில் மீட்டர் வந்துவிடும். விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக அவை வழங்கப்படும்,'' என்றார்.