இது தொடர்பாக மெட்ரிக் பள்ளிகளின் இயக்குனர் செந்தமிழ்ச்செல்வி அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் மூலமாக அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தையொட்டி தமிழக அரசு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, எல்.கே.ஜி. முதல் 8ஆம் வகுப்பு வரை அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாய கல்வி அளிக்கப்பட வேண்டும்.
தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. மற்றும் ஒன்றாம் வகுப்பு உள்ளிட்ட நுழைவு வகுப்புகளில் சேரும் மொத்த மாணவர்களில் குறைந்தபட்சம் 25 சதவீத இடங்களை அருகில் உள்ள பகுதிகள், நலிந்த பிரிவு மற்றும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டும்.
மாணவர் சேர்க்கையை மே மாதம் முதல் வாரத்தில் தொடங்க வேண்டும். விண்ணப்பம் கேட்கும் அனைவருக்கும் விண்ணப்பம் வழங்க வழங்கப்பட வேண்டும். இதுகுறித்து தனியே பதிவேடு ஒன்றை பராமரிக்க வேண்டும்.
மாணவர் சேர்க்கைக்காக மாணவருக்கும், பெற்றோருக்கும் நுழைவுத்தேர்வோ, நேர்முகத்தேர்வோ எதுவும் நடத்தக்கூடாது. 25 சதவீத இடங்களை ரேண்டம் முறையில் தேர்வு செய்து நிரப்ப வேண்டும். மாணவர் சேர்க்கை பற்றிய விவரங்களை வகுப்பு வாரியாக பள்ளி அறிவிப்பு பலகையில் மே மாதம் 3வது வாரத்தில் வெளியிட வேண்டும். மாணவர் சேர்க்கையின்போது நன்கொடையோ, நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணமோ வசூல் செய்யக்கூடாது என்று செந்தமிழ்ச்செல்வி எச்சரித்துள்ளார்.

No comments:
Post a Comment