புதிய பென்ஷன் திட்டம் அமலுக்கு வருவதால், ஊழியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்; அந்நிய முதலீட்டால், இரண்டு லட்சம் கோடி பென்ஷன் நிதிக்கு உத்தரவாதமில்லை' என, தொழிற்சங்கங்கள் அச்சம் தெரிவித்துள்ளன. பி.எஸ்.என்.எல்., தபால்துறை, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:புதிய பென்ஷன் திட்டத்தில், சம்பளத்தில் இருந்து 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த பணம், பங்கு சந்தையில் முதலீடு செய்து, வரும் லாபத்தில் பென்ஷன் வழங்குவதாக, அரசு கூறுகிறது. பங்கு சந்தையில் லாபம், நிரந்தர பென்ஷனை கொடுக்காது. அரசுப்பணி புரியும் பல லட்சம் பேர் பாதிக்கப்படுவர். மேலும், அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் முடிவை, அரசு கையில் எடுத்துள்ளது. இது, மத்திய அரசிடம் கையிருப்புள்ள, பென்ஷன் நிதி 2 லட்சம் கோடி ரூபாய்க்கு ஆபத்தானது. இந்த நிதியின் மூலம், அந்நிய நிறுவனங்கள் பயனடையும்.உதாரணமாக, ரயில்வே துறையில்12 லட்சம் பேர்; தபால்துறையில் 3.5 லட்சம்; பி.எஸ்.என்.எல்., 3 லட்சம் பேர்; தமிழ்நாடு அரசின் கீழ் 10 லட்சம் பேர் வரை பென்ஷன் பெறுகின்றனர். ஒவ்வொரு துறை மற்றும் மாநிலம் வாரியாக கணக்கீடு செய்தால்,
பென்ஷன்தாரர்களின் எண்ணிக்கை கோடிகளை தாண்டும். புதிய திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான அரசாணை, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு வந்துள்ளது. மசோதாவுக்கு எதிரான, வழிகாட்டி குழு தொழிற்சங்கங்களால் அமைக்கப்பட்டுள்ளது. இதில், அனைத்து சங்க நிர்வாகிகளும், உறுப்பினராக உள்ளனர். பிப்., 28ல், 15வது முறையாக, ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் நடக்கிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.எம்.பி., நடராஜன் கூறுகையில், "பென்ஷன் நிதி, பங்கு சந்தையில் முதலீடு செய்தால், திருப்பி வருவதற்கு உத்தரவாதமில்லை. "ஆளுங்கூட்டணி கருத்துவேறுபாடு அகன்று, பாஜ., ஆதரவு கிடைக்கும்பட்சத்தில், அடுத்த கூட்டத் தொடரில் நிறைவேற்றும் வாய்ப்புள்ளது. சட்டம் நிறைவேறினால், அனைத்து மாநிலத்தையும் அமல்படுத்த கட்டாயப்படுத்தலாம்'' என்றார்.
No comments:
Post a Comment