
சென்னை: சென்னையில் நர்சிங் கல்லூரி மாணவிகள் 200 பேர் இன்று கைது செய்யப்பட்டனர். அதில் 7 பேர் மயக்கம் அடைந்ததால் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அரசு செவிலியர் கல்லூரியில் படித்த மாணவிகள் பணிக்கு நேரடியாக தேர்வு செய்யப்பட்டு வந்தனர். இந்நிலையில் தேர்வு முறையில்தான் பணி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. பாதிக்கப்பட்ட மாணவிகள், பணி நியமன தேர்வை ரத்து செய்ய கோரி தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக ஆர்ப்பாட்டம், மனித சங்கிலி போன்ற போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதனால் நர்சிங் கல்லூரிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டது. எனினும் மாணவிகள் கல்லூரியை விட்டு செல்லாமல் தொடர்ந்து போராடி வருகின்றனர். சென்னை தேனாம் பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் நேற்று ஆர்பாட்டம் செய்த 250 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சிலர் மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் செவிலியர் கல்லூரி மாணவிகள் இன்று மெரினாவில் காமராஜர் சாலையில் மாநில கல்லூரி எதிரே ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர். அரசு பணி நியமன தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர்.
இந்த தகவல் அறிந்த அண்ணா சதுக்கம் போலீசார் விரைந்து சென்று ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற 200 பேரை கைது செய்தனர். அவர்கள் சிவானந்தா சாலையில் உள்ள அண்ணா கலையரங்கில் தங்க வைக்கப்பட்டனர். அதில் 7 பேர் மயக்கம் அடைந்தனர். ஒரு மாணவிக்கு வலிப்பு ஏற்பட்டது. 7 பேரும் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதற்கிடையில் 100க்கும் அதிகமானோர் கோட்டை முன்பு ஆர்ப்பாட்டம் செய்ய வருவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. உடனே கோட்டை முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர்.
அங்கு பஸ்சில் வந்த 150 மாணவிகளை திருப்பி அனுப்பினர். ஐந்து மாணவிகள் மட்டும் தலைமை செயலகம் சென்று கோரிக்கை மனு கொடுத்தனர்.
அரசு மருத்துவமனை செவிலியர் பணி நியமன தேர்வை தனியார் நர்சிங் கல்லூரி மாணவர்களும் எழுதலாம் என்று அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகள் 40 பேர் இன்று கோட்டைக்கு வந்தனர். முதல்வருக்கு நன்றி சொல்ல போகிறோம் என்றனர். அவர்களையும் போலீசார் மறித்து திருப்பி அனுப்பினர்.
No comments:
Post a Comment