பள்ளி, கல்லூரி மாணவர்களின் படைப்பாற்றலை வளர்க்கும் வகையில் மாவட்ட அளவிலான போட்டிகள், திருப்பூரில் ஜனவரி 19, 20-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் எம்.மதிவாணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே பேச்சு, படைப்பாற்றலை வளர்க்கும் நோக்கில், பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் மாவட்ட, மாநில அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் 2011-12ம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான போட்டிகள், ஜன.19-ம் தேதி திருப்பூரில் துவங்குகிறது. இதில் 19-ம் தேதி பள்ளி மாணவர்களுக்கும், 20-ம் தேதி கல்லூரி மாணவர்களுக்கும் திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கான போட்டிகளில், ஒரே பள்ளியைச் சேர்ந்த 3 மாணவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். ஒவ்வொரு போட்டியிலும் ஒரு பள்ளியிலிருந்து ஒருவர் மட்டுமே கலந்து கொள்ள முடியும். தகுதி அடிப்படையில் ஒரே மாணவர் 3 போட்டிகளிலும் பங்கேற்கலாம்.
போட்டிக்கான தலைப்புகள் போட்டி துவங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன் அறிவிக்கப்படும். மாணவர்கள் போட்டிகளில் கலந்து கொள்ள அதற்காக வழங்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து பள்ளி தலைமையாசிரியரிடம் கையெழுத்து பெற்று வர வேண்டும். இதே விதிகள் கல்லூரி மாணவர்களுக்கும் பொருந்தும்.
No comments:
Post a Comment