திருப்பூர் : பொங்கல் பண்டிகை விடுமுறையால், அரசு அலுவலகங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால், திருப்பூர் வெறிச்சோடியது. போகி, தைப்பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் திருநாள் (காணும் பொங்கல்) என நான்கு நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக நான்கு நாட்கள் விடுமுறை என்பதால், திருப்பூரில் வசிக்கும் தென்மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் குடும்பத்துடன், பொங்கல் கொண்டாட்டத்துக்கு சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்களுக்கும் பொங்கல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஞாயிறு தினமான நேற்று, வழக்கமாக மதியம் வரை செயல்படும் கடைகள், நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தன. சில பகுதிகளில் சொற்ப எண்ணிக்கையில் சிறிய ஜவுளி கடைகள் திறந்திருந்தன; ஆங்காங்கே சில பேக்கரிகள், ஓட்டல்கள் மட்டுமே செயல்பட்டன. பெரும்பாலான பகுதிகளில், மக்கள் நடமாட்டமின்றி ரோடுகள் வெறிச்சோடி காணப்பட்டன. முக்கிய வீதிகள், கடை வீதிகளில் வாகன போக்குவரத்து சொற்பமாக இருந்தது. ரோட்டோரங்களில் கரும்பு விற்பனை, சுறுசுறுப்பாக நடந்தது; மளிகை கடைகள், பூக்கடைகள் மற்றும் பலகார கடைகளில், வியாபாரம் ஜரூராக இருந்தது. இன்று (திருவள்ளுவர் தினம்) மதுக்கடைகளுக்கு விடுமுறை என்பதால், நேற்று "டாஸ்மாக்' மதுக்கடைகளில் "குடி' மகன்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
No comments:
Post a Comment