திருப்பூர் : திருப்பூரில் ரோடுகளில் வைக்கப்பட்டுள்ள டிவைடர்களில் போஸ்டர் ஒட்டுவதால் வாகன ஓட்டிகள் கவனம் சிதறி வருகிறது. விளம்பரம் செய்பவர்கள் மீது நெடுஞ்சாலைத்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூரில் அதிகரித்து வரும் வாகன போக்குவரத்தை சமாளிக்கும் வகையில், பல்லடம் ரோடு, அவிநாசி ரோடு, காமராஜர் ரோடு, தாராபுரம் ரோடுகளில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கான்கிரீட் டிவைடர்கள் வைக்கப்பட்டுள்ளன. நகர எல்லை வரை பல கிலோமீட்டர் தூரம் வைக்கப்பட்டுள்ள டிவைடர்களை, வாகன ஓட்டிகள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் கருப்பு, வெள்ளை வண்ணமும், இரவில் தெளிவாக தெரியும் வகையில் "ரிப்ளக்டர்' ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், திருப்பூரில் நகர பகுதிகளிலுள்ள டிவைடர்கள், வாகன புகை காரணமாக கருமை நிறத்துக்கு மாறியுள்ளன. மேலும், போஸ்டர்கள் ஒட்டவும், விளம்பரங்கள் எழுதவும், கட்சிக்கொடிகள் கட்டவும் பயன்படுத்தப்படுகின்றன.
டிவைடர்களில் உள்ள விளம்பரங்களால் வாகன ஓட்டிகள் கவனம் சிதறி, விபத்துகளுக்கு வழி வகுக்கிறது. "ரிப்ளக்டர்' இல்லாததோடு, ரோடுகளில் டிவைடர்கள் துவங்கும் பகுதியில் சிவப்பு நிறத்தில் எச்சரிக்கை அறிவிப்பும் இல்லை. இதனால், டிவைடர்கள் மீது மோதி விபத்து ஏற்படும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.
பல்லடம் ரோட்டிலுள்ள டிவைடர்களில் அதிகளவு போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன; இத்தகவல் கிடைத்ததும், அவற்றை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றி, வெள்ளை அடித்து, "பளீச்' என மாற்றியுள்ளனர். அதேபோல், நகரின் மற்ற ரோடுகளில் உள்ள டிவைடர்கள் மீது நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும். டிவைடர் மீது விளம்பரங்கள் செய்பவர்கள் மீது பாரபட்சமில்லாமல், அபராதம் மற்றும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "டிவைடர் மீது விளம்பரங்கள் செய்பவர்கள் மீது நெடுஞ்சாலைத்துறை சொத்துக்களை சேதப்படுத்தியதாக போலீசில் புகார் கொடுக்கவும், அபராதம் விதிக்கவும் வழிவகை உள்ளது. நகரிலுள்ள டிவைடர்கள் புதுப்பிக்கப்படும். இனி, டிவைடர்களில் விளம்பரம் செய்தால் கடும்
நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.
நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.