திருப்பூர் : ""அரசு திட்டங்கள் மூலம் சிகிச்சை என்ற பெயரில், தனியார் மருத்துவமனைகள் கொள்ளை லாபம் ஈட்டுகின்றன; அதை தடுக்க வேண்டும்,'' என தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., தங்கவேல் பேசினார். முதல்வரின் விரிவாக்கப்பட்ட மருத்துவ காப்பீடு திட்டம் துவக்க விழா, மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவில் நேற்று நடந்தது. மருத்துவ பணிகள் துறை இணை இயக்குனர் திருமலைச்சாமி வரவேற்றார். கலெக்டர் மதிவாணன், மடத்துக்குளம் எம்.எல்.ஏ., சண்முகவேலு பேசினார்.காப்பீடு திட்டத்துக்கான அலுவலகத்தை அமைச்சர் ஆனந்தன் திறந்து வைத்து பேசுகையில், ""காப்பீடு திட்ட குறைகளை களைந்து புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. முன்பு வழங்கப்பட்ட, "ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ்' தனியார் நிறுவன காப்பீடு; தற்போது, திட்டம் எடுத்துள்ள, "யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ்' அரசின் ஒரு அங்கமான நிறுவனம். மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் காப்பீடு திட்டம் குறித்து மருத்துவமனைக்கு வருபவர்களிடம் எடுத்துக்கூற வேண்டும்,'' என்றார்.தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., தங்கவேலு பேசியதாவது:வரவேற்கத்தக்க மாற்றங்களை, தமிழக முதல்வர் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். அதற்கேற்ப, அரசு டாக்டர்கள், பணியாளர்கள் செயல்பட வேண்டும். சமீபகாலமாக, அரசின் பல திட்டங்களை தனியார் மருத்துவமனைகள் பற்றிக் கொள்கின்றன.ஒரு நோயாளி தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்று விட்டால், அவரை "அமுக்கி', ஐ.சி.யூ.,வில் அனுமதித்து ஒரு லட்சம் ரூபாயை கறந்து விடுகின்றனர். கேட்டால், சிகிச்சைக்கான "பில்' என தலையில் கட்டி விடுகின்றனர். அரசு திட்டங்கள் மூலம் தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை என்ற பெயரில் கொள்ளை லாபம் ஈட்டுகின்றன; முதலில் இதை தடுக்க வேண்டும். இவற்றை தவிர்க்க, புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். கூடுதலாக டாக்டர்கள், பணியாளர்கள் நியமிக்க வேண்டும், என்றார்.பயனாளிகள் மூன்று பேருக்கு புதிய காப்பீடு திட்டத்தின் "ஸ்மார்ட் கார்டு' வழங்கப்பட்டது. மாநில நிதி குழு மானியமாக மூன்று கோடியே 16 லட்சம் ரூபாய், துணை மேயர் குணசேகரனிடம் வழங்கப்பட்டது. மாநகராட்சி கமிஷனர் ஜெயலட்சுமி, மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment