திருப்பூர், ஜன.13: பனியன் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு வழங்காவிடில் ஜனவரி 30ம் தேதி முதல் எந்த நேரத்திலும் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் துவங்கப்படும் என்று அனைத்து பனியன் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
பனியன் தொழிலாளர்களுக்கான 3 ஆண்டு சம்பள ஒப்பந்தம் 2010 டிசம்பருடன் முடிந்த நிலையில் ஓராண்டுக்கும் மேலாக புதிய ஒப்பந்தம் நிறைவேற்றாமல் பனியன் உற்பத்தியாளர் சங்கங்கள் காலம் கடத்தி வருகின்றன. 60 சதம் சம்பள உயர்வு உள்பட 14 அம்சக் கோரிக்கைகள் முன்னிறுத்தி புதிய ஒப்பந்தம் நிறைவேற்ற வேண்டும் என்று சிஐடியு, ஏஐடியுசி, எல்பிஎப், எம்எல்எப், ஐஎன்டியுசி, ஏடிபி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்தன.
இக்கோரிக்கைகள் மீது நடந்த 4 கட்ட பேச்சில் தீர்வு ஏற்படாததை அடுத்து கடந்த டிசம்பர் 21ல் அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பில் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, கோவை தொழிலாளர் துறை இப் பிரச்னையில் தலையிட்டு பனியன் தொழிலாளர் சம்பள ஒப்பந்தம் நிறைவேற்ற பனியன் உற்பத்தியாளர் சங்கங்கள், தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுத்தது.
அதன்படி, கோவை தொழிலாளர் நலத்துறை அலுவலகம், சைமா சங்கம், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க அலுவலகம் ஆகியவற்றில் உற்பத்தியாளர் சங்கப் பிரதிநிதிகளுக்கும், தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும் இடையே பேச்சு நடந்தது. கடைசியாக கோவை தொழிலாளர் துறை அலுவலகத்தில் நடந்த பேச்சிலும் சுமூகத் தீர்வு ஏற்படவில்லை.
இதையடுத்து, அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்தாலோசனைக் கூட்டம் திருப்பூரில் வெள்ளிக்கிழமை நடந்தது. திருப்பூர் எல்பிஎப் தொழிற்சங்க அலுவலகத்தில் நடந்த இக்கூட்டத்தில் சி.மூர்த்தி, ஜி.சம்பத் (சிஐடியூ), சி.பழனிசாமி, தண்டபாணி (ஏஐடியூசி) ஜி.பாலசுப்பிரமணியம், பூபதி (எல்பிஎஃப்), பி.கே.என்.தண்டபாணி (ஐஎன்டியூசி), செ.முத்துக்குமாரசாமி, அ.ராமசாமி, மனோகரன் (எம்எல்எஃப்)
உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில், கடுமையான விலைவாசி உயர்வு, பஸ் கட்டண உயர்வு என பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் பனியன் தொழிலாளர்கள் சிக்கியுள்ள நிலையில், நியாயமான ஊதிய உயர்வு வழங்க திருப்பூர் பனியன் உற்பத்தியாளர் சங்கங்கள் முன்வராமல் காலதாமதம் செய்து வருகிறது. ஓராண்டு முடிந்து மேலும் ஒரு மாத காலம் நெருங்கும் நிலையிலும்கூட புதிய ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கு உற்பத்தியாளர் சங்கங்கள் அக்கறைகாட்டாமல் உள்ளன.
இதனால், நியாயமான ஊதிய உயர்வைப் பெற்றிட தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழ்நிலையில் உற்பத்தியாளர் சங்கங்கள் உருவாக்கியுள்ளன. எனவே, வருகிற ஜனவரி 30ம் தேதியில் இருந்து எந்நேரத்திலும் திருப்பூரில் தொழிலாளர்களின் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் துவங்கப்படும். ஆகவே, புதிய சம்பள ஒப்பந்தத்தை விரைவில் நிறைவேற்ற உற்பத்தியாளர் சங்கங்கள் முன்வர வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
இவ்வேலைநிறுத்தப் போராட்டத்தை விளக்கி திருப்பூரில் 10 இடங்களில் பொதுக் கூட்டம் நடத்தப்படும் என்றும் தொழிற்சங்க கூட்டுக் குழு அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment