திருப்பூர், ஜன. 9: ஊத்துக்குளியில் வங்கி முன்பு நடந்த கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.15.34 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அண்ணா நகரைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (32). சர்க்கரை மொத்த விற்பனை நிலையம் நடத்தி வரும் இவரது நிறுவனத்தில் கண்ணன் (30) என்பவர் கணக்காளராக பணியாற்றி வந்தார்.
கடந்த நவம்பர் 19-ம் தேதி சர்க்கரை கொள்முதல் செய்ய ஊத்துக்குளி தனியார் வங்கியில் இருந்து ரூ.22.97 லட்சத்தை எடுத்த கண்ணன், பணத்தை தனது இருசக்கர வாகனப் பெட்டியில் வைத்துப் பூட்டினார்.
அருகிலுள்ள கடையில் டீ குடித்துள்ளார். இந்நேரத்தில் மர்மநபர்கள் அவ்வாகனப் பெட்டியின் பூட்டை உடைத்து, ரூ.22.97 லட்சத்தைக் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து, ஊத்துக்குளி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.
சம்பந்தப்பட்ட வங்கியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புப் கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது, அவ்விடியோ காட்சியில் இருந்த ஒருவர் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
வங்கியில் பரிவர்த்தனை ஏதும் செய்யாத அவர், சில கை ஜாடைகளையும் காட்டியுள்ளார். முகம் தெளிவாகத் தெரியாத நிலையிலும் அவரின் உடல் அமைப்புகளை வைத்து போலீஸார் விசாரணை நடத்தினர்.
இக்கொள்ளையில் திருச்சி காட்டூரை சேர்ந்த கிஷோர்குமார் (40), அவரது மனைவி பொன்னியின் செல்வி (35), பொன்னியின் செல்வியின் தம்பி தினேஷ்குமார் (29), செந்தில்நாதன் (26), ரவி, பல்ராம், ஜெய்கணேஷ் ஆகிய 7 பேருக்குத் தொடர்பிருப்பது தெரியவந்தது.
அதனடிப்படையில், தேடுதல் பணியை தீவிரப்படுத்திய போலீஸார் கடந்த சில தினங்களுக்கு முன்பு பொன்னியின்செல்வி (35), தினேஷ்குமார் (29), செந்தில்நாதன் (26) ஆகியோரைக் கைது செய்தனர். ஆந்திராவில் தலைமறைவாக இருந்த கிஷோர்குமாரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். இவ்வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் கொள்ளைபோன ரூ.15.34 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதானவர்கள் மீது ஏற்கனவே திருப்பூர் மாவட்டத்தில் 4 கொள்ளை வழக்குகளும், ஈரோடு மாவட்டத்தில் ஒரு கொள்ளை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, திருப்பூர் மாவட்ட எஸ்பி வி.பாலகிருஷ்ணன் கூறுகையில், வெள்ளக்கோவிலில் நடந்த 3 கொள்ளை சம்பவங்களில் ரூ.7.70 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. ஒரு கொள்ளை முயற்சி வழக்கும் பதிவாகியுள்ளது. மேலும், சத்தியமங்கலத்தில் ரூ.1.50 லட்சம் கொள்ளையடித்ததாக வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது. மொத்தம் 5 வழக்குகளில் ரூ.32.17 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.15.34 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள 7 பேரில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மற்ற 3 பேரை தேடும் பணியில் தனிப்படை போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இக்கொள்ளையர்கள், கொள்ளையடித்த பணத்தை உல்லாச வாழ்க்கைக்கு செலவழிக்காமல் நிலம் வாங்கிப் போட்டு, ஆந்திராவில் வட்டிக்கு விட்டுத் தொழில்களை செய்து வருகின்றனர் என்றார்.
No comments:
Post a Comment