திருப்பூர் பின்னலாடை துணி உற்பத்தியாளர் சங்கம் (நிட்மா), வளம் அமைப்பு இணைந்து நொய்யல் சீரமைப்புப் பணிக்குழு சார்பில் திருப்பூரில் நொய்யல் நதிக்கரையில் பொங்கல் திருவிழா கடந்த ஆண்டு கொண்டாடப்பட்டது. இவ்விழாவுக்கு மக்களிடையே கிடைத்த வரவேற்பை அடுத்து 2-ம் ஆண்டாக பொங்கல் திருவிழாவை ஞாயிறு, திங்கள்கிழமைகளில் கொண்டாட உள்ளன.
திருப்பூர் வளம் சாலை நொய்யல் நதிக்கரையில் இவ்விழா ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு பொங்கல் வழிபாட்டுடன் துவங்க உள்ளது. துணைமேயர் சு.குணசேகரன் பொங்கல் சீருடன் மாநகராட்சியின் 31-வது வார்டைச் சேர்ந்த 108 பெண்கள் பொங்கல் வைக்க உள்ளனர்.
மாலை 4 மணிக்கு மங்கள இசை மற்றும் தப்பாட்ட நிகழ்ச்சியும், 5 மணிக்கு விகடகவி குழுவினரின் கிராமிய கலை நிகழ்ச்சியும், 6.30 மணிக்கு கொங்கு மெட்ரிக். பள்ளிக் குழந்தைகளின் கலை நிகழ்ச்சியும், 7 மணிக்கு வாழ்த்துரை நிகழ்ச்சியும், 9 மணிக்கு வாணவேடிக்கையும் நடக்க உள்ளது.
2-ம் நாளான திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு மங்கள இசை மற்றும் தப்பாட்ட நிகழ்ச்சியும், 5 மணிக்கு விகடகவி குழுவினரின் கிராமிய கலை நிகழ்ச்சிகளும், 6 மணிக்கு விகாஸ் வித்யாலயா பள்ளிக் குழந்தைகளின் நடன நிகழ்ச்சியும், 7 மணிக்கு வாழ்த்துரையும், 9 மணிக்கு வாணவேடிக்கை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடக்க உள்ளன.
கிராமப்புற விழாவை நினைவுபடுத்தும் விதமாக ராட்டினம், கிளி ஜோசியம், விளையாட்டுப் பொருட்கள் விற்பனைக் கடைகள், கரும்புக்கடைகள் போன்றவைகளும் அமைக்கப்பட உள்ளன. வேலைக்காக தங்கள் இருப்பிடத்தை விட்டு திருப்பூர் நோக்கி வந்துள்ள மக்களுக்கு கலாசாரத்தை நினைவுபடுத்தும் விதமாக இவ்விழா நடத்தப்பட உள்ளதாக நொய்யல் சீரமைப்புக் கமிட்டித் தலைவர் அகில் சு.ரத்தினசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது: இருநாட்கள் நடக்கும் இப்பொங்கல் திருவிழாவை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எம்,எஸ்.எம்.ஆனந்தன் துவக்கி வைக்க உள்ளார். தெற்கு எம்எல்ஏ கே.தங்கவேலு, மேயர் ஏ.விசாலாட்சி, சிவசாமி எம்பி உள்பட முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்க உள்ளனர். பொதுமக்களும் இவ்விழாவில் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment