
திருப்பூரில் சாய ஆலைகள் படிப்படியாக இயங்க துவங்கிஇருப்பதால், பனியன் துணிகளுக்கு சாயமிடுவதில் இருந்த சிக்கல் தீர்ந்து, சிறு, குறு பனியன் உற்பத்தி சூடுபிடித்துள்ளது. திருப்பூரில், 2,000க்கும் அதிகமான சிறு, குறு பனியன் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. பெரிய நிறுவனங்களிடம் கட்டு எடுத்து,
தைத்துக் கொடுப்பது, உள்ளூர் மார்க்கெட் விற்பனைக்கான ஜவுளி ரகங்கள் மற்றும் உள்ளாடைகளை உற்பத்தி செய்வது உள் ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இவற்றில், 15 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஈரோடு, கோவை ஜவுளி சந்தைகள், பிளாட்பார ஜவுளி கடைகள், வெளிமாநில சந்தைகளுக்கு இத்தகைய ஆடைகள் விற்பனைக்கு செல்கின்றன. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிமாவட்டங்களில் இருந்தும் ஆர்டர்கள் வருகின்றன. சாய ஆலைகள் ஓடாமல் இருந்ததால், பனியன் துணி கிடைக்காமல், உள்ளா டைகள் மற்றும் குழந்தைகள் பனியன் ஆடை உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டது. "சிஸ்மா' பொது செயலாளர் பாபுஜி கூறியதாவது: சாய ஆலைகள் மூடியிருந்ததால், வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு சென்று துணிகளுக்கு சாயமிடப்பட்டது. உற்பத்தி செலவு அதிகரித்ததுடன், பனியன் துணிகளை விலைக்கு வாங்கி, சரியான நேரத்துக்கு உற்பத்தியை முடிக்க இயலவில்லை. இதனால், திருப்பூருக்கான சிறு பனியன் ஆர்டர்கள் வேறு மாநிலங்களுக்கு சென்றன. மின்வெட்டு பிரச்னையாலும், பனியன் துணிகள் கிடைக்காமலும், உற்பத்தி நாளுக்கு நாள் குறைந்தது; தொழிலாளர்கள் வேலையிழந்தனர். தற்போது சாய ஆலைகள் இயங்க துவங்கியிருப்பதால், ஆர்டர்களை குறித்த நேரத்தில் முடிக்க முடியும். சாயத்தொழில் நிலைமை சீராகி வருவதால், வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட ஆர்டர்கள் தேடி வருகின்றன. வரும் ஜன., 15 முதல் ஆர்டர்கள் ஒப்பந்தமாகும். ஆறு மாதத்துக்கு முன், வெளிமாநிலங்களுக்கு சென்று பனியன் துணிகளுக்கு சாயமிட, 30 முதல் 35 நாட்களாகும். இங்குள்ள அவசர நிலையை உணர்ந்து, தற்போது 15 முதல் 18 நாட்களுக்குள் துணிகளை அனுப்புகின்றனர். சாயமிடுவதில் நீடித்த சிக்கல் விலகி யிருப்பதால், பெறப்படும் ஆர்டர்களை குறித்த நேரத்தில் முடிக்கலாம் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது, என்றார்.
No comments:
Post a Comment