திருப்பூரில் உள்ள ரசு கேபிள் "டிவி' கட்டுப்பாட்டு அறைக்கு மீண்டும் ஜெனரேட்டர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசு கேபிள் "டிவி' கட்டுப்பாட்டு அறை உள்ளது. இங்கு, ஜெனரேட்டர் வசதி இல்லை. அதனால், மின் தடை நேரங்களில் கேபிள் ஒளிபரப்பு பாதித்தது. இதற்கு தீர்வு காணும் வகையில், கேபிள் ஆபரேட்டர்கள், தங்கள் செலவில் ஜெனரேட்டரை வாடகைக்கு பெற்று இணைப்பு வழங்கினர். மாத வாடகையாக 22 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தினமும் சராசரியாக 300 ரூபாய் டீசல் செலவாகியது. இதற்கு கேபிள் "டிவி' நிறுவனம் சார்பில் எந்த வகையிலும் செலவிட முடியாத நிலை உள்ளது. அதனால், திருப்பூர் நகரப் பகுதியில் உள்ள கேபிள் ஆபரேட்டர்கள் செலவை ஏற்றுக்கொண்டனர்.இரண்டு நாட்களுக்கு முன், வாடகை செலுத்தும் பிரச்னை காரணமாக ஜெனரேட்டர் இணைப்பு துண்டிக்கப்பட்டு, திரும்ப எடுத்துச் செல்லப்பட்டது. இதன் காரணமாக, கேபிள் ஒளிபரப்பு மீண்டும் பாதிக்கப்பட்டது. இதுதொடர்பாக, "தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.தற்போது, ஜெனரேட்டருக்கான வாடகை மற்றும் பராமரிப்பு செலவுகள் என 33 ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டு விட்டது. மீண்டும் ஜெனரேட்டர் கொண்டு வரப்பட்டு, பொருத்தப்பட்டுள்ளது. வரும் 5ம் தேதி திருப்பூர் வரும் அரசு கேபிள் "டிவி' கார்ப்பரேஷன் தலைவரிடம், ஜெனரேட்டர் பிரச்னை தொடர்பாக முறையிட கேபிள் ஆபரேட்டர்கள் திட்டமிட்டுள்ளனர்.
