அவிநாசி : "சாலை பராமரிப்பு பணியை தனியாரிடம் வழங்கக் கூடாது,' என்று சாலை பணியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அவிநாசி கிளை, நெடுஞ்சாலைத்துறை பணியாளர் சங்க நான்காவது மாநாடு, கிளை தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடந்தது. செயலாளர் ராமன் வேலை அறிக்கையையும், பொருளாளர் முருகேசன் வரவு - செலவு அறிக்கையையும் தாக்கல் செய்து பேசினர். மாநில தலைவர் சிங்கராயன் சிறப்புரை ஆற்றினார். மாநாட்டில், "நான்கு மாத காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்; மாத சம்பளத்தை அரசு கருவூலம் மூலம் வழங்க வேண்டும்; சாலை பராமரிப்பை தனியாரிடம் வழங்கக் கூடாது; இறந்த சாலை பணியாளர் குடும்பத்துக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும்,' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் நடராஜன், சாலை பணியாளர் சங்க திருப்பூர் கோட்ட பொறுப்பாளர்கள் கருப்பன், கந்தசாமி ஆகியோர் பேசினர். வட்ட கிளை பொருளாளர் முருகேசன் நன்றி கூறினார்.