பனியன் தொழிலாளர் சம்பள உயர்வுப் பிரச்னையில் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் (சைமா), தொழிற்சங்க நிர்வாகிகளிடையே சுமுக உடன்பாடு ஏற்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியது. இருப்பினும், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்துடனான பேச்சு மீண்டும் தோல்வியில் முடிந்தது.
÷பனியன் தொழிலாளர்களுக்கான 3 ஆண்டு சம்பள ஒப்பந்தம் கடந்த 2010 டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. தொடர்ந்து, 2011 ஜனவரி 1-ம் தேதி முதல் புதிய சம்பள உயர்வு வழங்கியிருக்க வேண்டிய நிலையில் ஓராண்டுக்கு மேலாகியும் ஒப்பந்தம் ஏற்படவில்லை. இது தொடர்பாக உற்பத்தியாளர் சங்கங்களான சைமா, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்துடன் தொழிற்சங்க நிர்வாகிகள் நடத்திய பலகட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
÷இதனால், தொழிலாளர்களிடையே ஏற்பட்டு வந்த பாதிப்பை அடுத்து கடந்த டிச.21-ல் தொழிற்சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, இப்பிரச்னையில் தொழிலாளர் நலத்துறை தலையிட்டு பிரச்னையை சுமுகமாக முடிக்க நடவடிக்கை மேற்கொண்டது. அதைத் தொடர்ந்தும் பல்வேறு கட்டமாக சம்பள உயர்வு பேச்சு நீடித்தது.
÷இறுதியாக சைமா சார்பில் அதிகபட்சமாக மொத்தம் 24 சதமும், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் சார்பில் 20 சதமும் மட்டுமே சம்பள உயர்வு வழங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் இருந்தது.
÷இந்நிலையில், சைமா, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் மற்றும் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடனான சம்பள உயர்வு பேச்சு தொழிலாளர் நலத்துறை சார்பில் கோவையில் திங்கள்கிழமை நடந்தது.
÷தொழிலாளர் நல இணை ஆணையர் ஆர்.பாலச்சந்திரன் தலைமையில் நடந்த இப்பேச்சுவார்த்தையில், சைமா தலைவர் ஏ.சி.ஈஸ்வரன், செயலர் பொன்னுச்சாமி, துணைத் தலைவர் கோவிந்தப்பன், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க பொதுச் செயலர் ஜி.கார்த்திகேயன், துணைத் தலைவர் பிரேம் துரைசாமி, தொழிற்சங்கங்கள் தரப்பில் ராமகிருஷ்ணன் (எல்பிஎஃப்), மூர்த்தி (சிஐடியூ), பாலாமணி (ஏஐடியூசி), முத்துக்குமாரசாமி (எம்எல்எஃப்), கண்ணபிரான் (ஏடிபி), தண்டபானி, பெருமாள் (ஐஎன்டியூசி) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
÷திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க நிர்வாகிகளுடன் காலையில் நடந்த பேச்சில் அச்சங்கம் அதிகபட்சமாக 4 ஆண்டுகளுக்கு 20 சதவீதத்துக்கு மேல் சம்பள உயர்வு வழங்க முடியாது என திட்டவட்டமாகக் கூறியதால் அச்சங்கத்துடனான பேச்சு மீண்டும் தோல்வியில் முடிந்தது.
÷இப்பேச்சு கோவை தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் மீண்டும் புதன்கிழமை நடக்க உள்ளது.
÷சைமா நிர்வாகிகளுடன் மாலை நடந்த பேச்சு வார்த்தையில் முதலாண்டு 20 சதவீதமும், 2, 3 மற்றும் 4-ம் ஆண்டுகளுக்கு தலா 4 சதவீதமும் சம்பள உயர்வு என மொத்தம் 32 சதவீதம் சம்பள உயர்வும், நடைமுறை பஞ்சப்படியை ரூ.7.50 உயர்த்தியும், நடைமுறை பயணப்படியை ரூ.5 உயர்த்தியும் வழங்குவதாக சைமா சங்கத்தினர் தெரிவித்தனர். இதை தொழிற்சங்க நிர்வாகிகளும் ஏற்றுக்கொண்டதை அடுத்து கோவை தொழிலாளர் நல இணை ஆணையர் ஆர்.பாலச்சந்திரன், தொழிலாளர் நல அலுவலர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலையில் சம்பள உயர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
÷ விரைவில் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்துடனும் சுமுக உடன்பாடு ஏற்படும் என நம்புவதாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.