திருப்பூர் : தொழில்நுட்ப பணியாளர்கள் இல்லாத காரணத்தால், திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் பொருத்தப்பட்ட எல்.சி.டி., "டிவி'கள் உபயோகமின்றி, வீணாகி வருகின்றன. திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து செல்லும் ரயில்கள், ரயில் வந்து கொண்டிருக்கும் இடம், வரும் நேரம், தாமதம், ரயில் எண் உள்ளிட்ட விவரங்களை, பயணிகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள வசதியாக, ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் எல்.சி.டி., "டிவி' பொருத்தப்பட்டது. பயணிகள், ஒவ்வொரு முறை ரயில்வே அதிகாரிகளிடம் சென்று விவரம் கேட்காமல், எல்.சி.டி., "டிவி'களை பார்த்து தெரிந்து கொண்டனர். கடந்த இரு வாரங்களாக, அவற்றில் ரயில் வரும் நேரங்கள் ஒளிபரப்பு செய்யப்படுவதில்லை. ரயில் வரும் விவரங்களை தெரிந்து கொள்ள, டிக்கெட் கொடுக்கும் அலுவலர்கள், பாதுகாப்பு அதிகாரிகளை பயணிகள் நச்சரிக்கின்றனர். ஒரு "கவுன்டர்' மட்டுமே இருப்பதால் டிக்கெட் கொடுப்பது, பயணிகளுக்கு பதில் சொல்வது என இடைஞ்சல் ஏற்படுகிறது. ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ரயில் நேரம், ரயில் எங்கு வந்து கொண்டிருக்கிறது; எவ்வளவு நேரம் தாமதம் என்ற விவரங்கள் துல்லியமாக தெரிந்தால் மட்டுமே அறிவிக்க முடியும். தகவல் தொழில் நுட்ப துறையில், இதற்கென படிப்பு முடித்த பணியாளர்கள் இல்லாமல் இருப்பதால், எல்.சி.டி., "டிவி'யில் ரயில் வரும் விவரங்களை ஒளிபரப்ப முடியாமல் நிறுத்தி வைத்துள்ளோம். ""முதலில் நியமிக்கப்பட்ட பணியாளர்கள், வேறு இடங்களுக்கு மாறுதலாகிச் சென்று
விட்டனர். புதிய பணியாளர்கள் நியமித்தபின்பே மீண்டும் ஒளிபரப்பப்படும், என்றார்.
விட்டனர். புதிய பணியாளர்கள் நியமித்தபின்பே மீண்டும் ஒளிபரப்பப்படும், என்றார்.
