திருப்பூர் மாவட்டத்தில் உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளவர்களின் பட்டியல் அந்தந்த கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இப்பட்டியலில் தங்கள் பெயர் விடுபட்டிருந்தால் உழவர்கள், உழவுத்தொழில் சார்புடையோர் தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் ஆட்சியர் எம்.மதிவாணன் தெரிவித்துள்ளார்.
÷இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி:
நஞ்சை நிலமாக இருந்தால் 2.5 ஏக்கர், புஞ்சை நிலமாக இருந்தால் 5 ஏக்கர் அளவுக்கு மிகாமல் சொந்தமாக விவசாயம் செய்வோர், விவசாயம் சார்ந்த தொழிலில் கூலி வேலை பார்ப்போர், சிறு குறு விவசாயிகள் இத்திட்டத்தில் சேரத் தகுதி படைத்தவர்களாவர். அத்துடன் தோட்டக்கலை, பட்டுப்புழு வளர்ப்பு, புல் வளர்ப்பு, தோட்ட விளைபொருள் உற்பத்தி, மேய்ச்சலுக்கு பயன்படுத்தும் நிலம் வைத்திருப்போர், பால் பண்ணை, கால்நடை வளர்ப்பு, மரம் வளர்ப்பு, உள்ளூர் மீன்பிடி தொழிலில் ஈடுபடுவோரும் இத்திட்டத்தில் சேரலாம். வயது வரம்பு 18 முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும்.