பணத்தைத் திருடலாம்!
தங்கத்தைத் திருடலாம்!
அறிவை..?
காவல் நிலையங்கள்
நீதி மன்றங்கள்
இத்தனை இருந்தும்
ஏன் குறையவில்லை குற்றங்கள்?
பதிவுலகத் திருட்டைத் தடுக்க
எத்தனை எத்தனை
வழிமுறைகள்
வலதுசுட்டியைச் செயலிழக்கவும்
இடது சுட்டியைச் செயலிழக்கவும்
காப்புரிமை சட்டங்களும்
ஆயிரம் ஆயிரம்
பாதுகாப்புகள் இருந்தாலும்
தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன
பதிவுலகத் திருட்டுகள்..
பலர் புலம்புகிறார்கள்..
ஐயோ ஐயோ
குய்யோ முறையோ
கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல்
என்னோட பதிவை தன்னோட பதிவென்று வெளியிடுகின்றானே..
என் பெயர் சொல்லியாவது வெளியிட்டிருக்கலாமே..
என்று..
இத்தனை காலம் நான் வாழ்ந்த வாழ்வில் கற்ற பாடம்..
- திருடர்கள் என்றாவது அறிவாளியாவார்கள்
ஆனால்
அறிவாளிகள் என்றும் திருடர்களாக மாறிவிடக்கூடாது..
- ஒருவர் பதிவை இன்னொருவர் திருடுகிறார் என்றால்
எழுதுகிறவர் அறிவுபூர்வமாக எழுதுகிறார்
திருடுபவருக்கு அறிவுப் பசி எடுத்திருக்கிறது
என்பது பொருள்.
நான் பதிவுலகில் கால்பதித்த காலத்தில் எனது பதிவைப்
பலரும் என் பெயரோடு வலைமுகவரியோடு வெளியிட்டார்கள்
சிலர் என் பெயரில்லாமல் வெளியிட்டார்கள்
சிலர் என் பதிவைத் தன்பதிவு என்று வெளியிட்டார்கள்..
என் பதிவுகளை யார் எடுத்தாண்டாலும் அதற்காக நான் வருந்தியதில்லை...
மாறாக நம் கருத்து இவருக்கும் பிடித்திருக்கிறது என்றே எண்ணி மகிழ்ச்சியடைந்திருக்கிறேன்.
நாலு பேர் நம்ம அறிவைத் திருடிக் கொள்வார்கள் என்ற எண்ணம் எனக்கு என்றுமே இருந்ததில்லை..
அதனால் தானோ என்னவோ
தமிழ் வலையுலகம் எனக்கு
நாலாவது இடமளித்து ஊக்குவித்து வருகிறது.
நான் ஒவ்வொரு பதிவு எழுதும்போதும்..
இதுவரை எழுதாத ஒன்றை இதில் எழுதவேண்டும் என்ற ஆர்வத்துடனேயே எழுதுவேன்..
நான் எழுதிய பதிவை நானே படிக்கும்போது
புதிதாக நாம் எதையும் எழுதிவிடவில்லை என்றே
எண்ணி வந்திருக்கிறேன்.
நம் கருத்தை எத்தனைபேர் திருடியிருக்கிறார்கள்?
என்று பார்ப்பதைவிட
நம் கருத்து எத்தனை பேருக்குப் பிடித்திருக்கிறது?
என்ற தேடலே நம்மை நாம் வளர்த்துக்கொள்ளத் துணைநிற்கும் என்று கருதுகிறேன்.
அதனால் நாம் அறிவாளிகள் என்பதை
நமக்கும் உணர்த்தி
நம்மை உலகிற்கு அறிமுகம் செய்யும் இந்த
பதிவுலகத் திருடர்கள் வாழ்க!
