பனியன் உற்பத்திக்காக வழங்கப்பட்ட மின் இணைப்பை அலுவலகப் பயன்பாட்டுக்காக உபயோகிப்பதாகக்கூறி மின்சார வாரிய அதிகாரிகள் அபராதம் விதிப்பதை நிறுத்த வேண்டும், என திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழு வலியுறுத்தியுள்ளது.
÷திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழுவின் உயர்மட்டக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை திருப்பூரில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு குழுத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பழனிச்சாமி, செயலாளர் ராமசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர்கள் ஆர்.அண்ணாதுரை, டி.ஆர்.விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
÷மின் பற்றாக்குறை காரணமாக திருப்பூரில் வெள்ளிக்கிழமை மின்விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மின்விடுமுறை, தொழில்துறையினரை பெரிதும் பாதித்துள்ள நிலையில், மின்விடுமுறை தவிர மற்ற நாட்களிலும், நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது.
÷இத்தகைய நெருக்கடியான சூழ்நிலையில், பனியன் உற்பத்திக்காக வழங்கப்பட்ட மின் இணைப்பை அலுவலகப் பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்துவதாகக் கூறி, பனியன் உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து மின்சார வாரிய அதிகாரிகள் லட்சக்கணக்கான ரூபாய் அபராதமாக வசூலித்துள்ளனர்.
திருப்பூர் பனியன் தொழிலுக்கு தடையற்ற மின்சாரம் வழங்க முடியாத மின்சார வாரியம்,எந்தவித முன் அறிவிப்புமின்றி இதுபோல் திடீர் அபராதம் வசூலிப்பதை,திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழு கண்டிக்கிறது.
இதுபோன்ற புதிய விதிமுறை தொழில் துறையினருக்கு முறையாகத் தெரிவிக்கப்படுவதோடு, வசூலிக்கப்பட்ட அபராதத் தொகையை மின்வெட்டால் பாதிக்கப்படும் தொழிற்சாலைகளுக்கே திருப்பி வழங்க வேண்டும்.
ஒன்றுக்கு மேற்பட்ட மாடுகளை வைத்திருந்தால், இலவச மின்சாரத்தைப் பயன்படுத்தி வணிகம் செய்வதாகக் கூறி இதற்கும் இலவச மின் இணைப்பு பெற்றுள்ள விவசாயிகளிடம் அபராதத் தொகை மின்சார வாரிய அதிகாரிகளால் வசூலிக்கப்படுகிறது.
எனவே,மாடு வளர்க்கும் சிறு விவசாயிகளையும் இப் பிரச்னையில் இருந்து தமிழக அரசு காப்பாற்ற வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.