திருப்பூர், மார்ச் 20: நலிவடைந்த நிலையிலுள்ள சிறந்த விளையாட்டு வீரர்கள் மாதாந்திர ஓய்வூதியம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் எம்.மதிவாணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
÷விளையாட்டுத் துறையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்று, தற்போது நலிந்த நிலையிலுள்ள சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியமாக மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் வழங்கும் திட்டத்தின்கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் வாழும் நலிந்த நிலையிலுள்ள சிறந்த விளையாட்டு வீரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
÷குடும்பத்தின் மாத வருமானம் ரூ.6 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். தேசிய விளையாட்டுக் கழகங்கள், மாநில விளையாட்டுக் கழகங்கள் நடத்திய மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும் அல்லது பதக்கம் பெற்றிருக்க வேண்டும்.
÷விண்ணப்பப் படிவத்தை திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி வளாகத்திலுள்ள மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்தில் ரூ.10 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை வரும் 26-ம் தேதிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.