நம்பாதீங்க முன்குறிப்பு:
இந்த பதிவின் நோக்கம் உண்மையை உரைப்பதே.
எந்த மதத்தையும் நம்பிக்கையையும் புண்படுத்துவது நோக்கமல்ல!!
இது "நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு!" பற்றிய கதை!!
கதை இதோ:
இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் போது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு, வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை.
இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்தது.
இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது.
ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள
புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள
வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்துவிடுகின்றன.
அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் ???
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்துகொண்டே இருக்கிறது.
இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் பொது இந்த
கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில்
சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும்
பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்து விடுகின்றன. அதே நேரத்தில்
செயற்கைகோள்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படுவதில்லை.
இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த கோவில்தான் இந்துக்களால் 'சனிபகவான்' தலம் என்று போற்றபடுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர். மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர். அவர்களும் சனிபகவானை கையெடுத்து கும்பிட்டு உணர்ந்தனர்.
இன்று வரை விண்ணில் செயற்கைகோள்கள் திருநள்ளாறு பகுதியை கடக்கும் பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது.
இந்த செய்தியை கேட்டு பிரமிக்காதவர்கள் நம்முடைய முன்னோர்களை நினைத்து கட்டாயம் பிரமிக்கவேண்டும். நாம் பல செயற்கைகோள்கள் கொண்டு கண்டறியும் சனிகோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் அதிகள் விழும் நாட்களையும் கணக்கிட்டு
அதற்க்கான நாளை சனிபெயர்ச்சி என்று அறிவிக்கும் திறமையை,நம்மால்
நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட நம்
முன்னோர்களை நினைத்து என்னால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை...
(ஆதாரம்: ஆன்மீகக்கடல்)
இந்த செய்தியை நம்பி திருநள்ளாறினை நினைத்து வியக்காதவர் இல்லை..
ஆனால், இது "திருநள்ளாறு" என்ற புனிதத்தலத்தின் பேரில் அனைவருக்கும் தண்ணி காட்டிய கதை!!
உண்மை
இங்கே தெரிவிக்கப்பட்டுள்ள செய்தியில் 1 சதவிகிதம் கூட உண்மையாக இருக்க முடியாது!!! இது அறிவியல் விதிகளுக்கு எதிரானது!
முதலில் செயற்கைக்கோள்கள் ஏன் பூமியை சுற்றுகிறன என்பதை அறிந்து கொள்வோம்..
பொருண்மை உள்ள அனைத்துப் பொருட்களும் கால வெளியில் ஓர் விசையை உருவாக்குகின்றன. அவ்விசையின் காரணமாக அவை ஒன்றையொன்று ஈர்க்கின்றன. இந்த ஈர்ப்பு விசையே புவியீர்ப்பு விசை (gravitation) என்றழைக்கப்படுகிறது.
எப்போதும் வலிய பொருள் எளியதைத் தன்னை நோக்கி மிக வேகமாக ஈர்க்கும்..
வலிய பொருளின் ஈர்ப்பால் இழுபடாமல் இருக்கவே, செயற்கைக்கோள் பூமியைச் சுற்றுகிறது!
தற்போது அது நடக்க ஏன் சாத்தியம் இல்லைகா என்பதற்கான காரணங்களுக்கு வருவோம்:
காரணம் #1: செயற்கைக்கோள் சுற்றும் போது அரை நொடி அப்படியே ஸ்தம்பித்து நின்றாலும், அது பூமியை நோக்கி விழத் துவங்கி விடும்.
காரணம் #2: உலகில் உள்ள 8 கி.மீ/ நொடி வேகத்தில் செல்லும் எந்த பொருளையும் நொடிப்பொழுதில் நிறுத்த முடியாது!
காரணம் #3: அப்படி விழுந்து மேலெலுப்படுகிறது என்றாலும், 88 மீ மேலே தூக்க
வேண்டும்... எத்தனை சிறிய செயற்கைக்கோளாக இருந்தாலும், இவ்வளவு உயரத்தை
நொடிப்பொழுதில் (ஸ்தம்பித்த நிலையில் இருந்து) எட்டுவது எப்படி சாத்தியம்?
காரணம் #4: செயற்கைக்கோள் ஸ்டம்பித்து இருக்கும் கால அளவுக்குள் 90 கி.மீ தூரம் கடந்திருக்கும்.. இந்த தூரத்தை செயற்கைக்கோள் எவ்வாறு எட்டும்?
மேலும்...
ஒரு சக்திமையத்தில் (Energy Source ) இருந்து தான் சக்திகள் விதவிதமாக வரமுடியும்..
மற்றவையால் தன்னிடம் வரும் சக்தியில் ஒரு பகுதியை திருப்பி விட மட்டுமே முடியும்!!
சூரிய குடும்பத்தில் உள்ல ஒரே சக்தி மையம் சூரியன்..
சனி கிரகம் தன்னிடம் வரும் சக்தியில் ஒரு பகுதியைத் திருப்பத் தான் முடியும்..
அங்கு பட்டு ஒளிரும் வெளிச்சமே நமக்கு கோளாகத் தெரிகிறது!!!
பிறகு எப்படி கருநீலக் கதிர்கள் (UV Rays)அடர்த்தி மாறும்?
சிலர் இதற்கு வேறு விதமாக விளக்கம் சொல்கிறனர்.. அதாவது, செயற்கைக்கோள் ஸ்தம்பிப்பபது என்றால், மிண்ணணு சாதனங்களை மட்டுமே குறிக்கும். விசையைக் குறிக்காது என்று..
அப்படி என்றால், புகைப்பட கருவியும் வேலை செய்து இருக்காது தானே? எப்படி கூகிள் மேப்பில் திருநள்ளாறு படம் இருக்கிறது???
இணையத்தில் கிடக்கும் சில தவறான தகவல்களுள் இதுவும் ஒன்று..
திருநள்ளாறு சனி பகவானிற்காக கட்டப்பட்ட ஒரு புண்ணிய தலம்..
தவறான தகவல்களைப் பரப்பி அதன் புகழை மங்கச் செய்து விட வேண்டாம்!
அன்பர்களே , அறிவியல்ரீதியாக இதனை விளக்கி உள்ளேன்.


