புத்தாண்டு உட்பட, விழாக்காலங்களில் மொபைல் போன்களில் அனுப்பப்படும் எஸ்.எம்.எஸ்.,களுக்கு அதிக கட்டணம் வசூலிக்க தடை கோரிய வழக்கில் பதிலளிக்க, டிராய் மற்றும் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு, மதுரை ஐகோர்ட் கிளை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
காரைக்குடி அருகே, கண்டனூரைச் சேர்ந்த அருணாசலம் தாக்கல் செய்த பொது நல வழக்கு: மொபைல் போன் நிறுவனங்கள், சாதாரண நாட்களில் ஒரு எஸ்.எம்.எஸ்.,க்கு, 1 ரூபாய் வசூலிக்கின்றன. விழா மற்றும் முக்கிய காலங்களில், எஸ்.எம்.எஸ்., அனுப்பும் பலவீனத்தைப் பயன்படுத்தி, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அதிக லாபம் சம்பாதிக்கின்றன.
ஒரு எஸ்.எம்.எஸ்.,க்கு மூன்று மடங்கு கட்டணம் நிர்ணயிப்பது நியாயமற்றது. கட்டணங்களை திடீரென உயர்த்துகின்றனர்; இது, சாதாரண மக்களை பாதிக்கிறது. இவர்கள் மீது, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ( டிராய்) நடவடிக்கை எடுப்பதில்லை. சேவைக்கு கட்டணம் இல்லை எனக் கூறிவிட்டு, கட்டணம் வசூலிப்பது சரியல்ல. டிச., 31 முதல், 2012 ஜன., 1 வரை அனுப்பப்படும், எஸ்.எம்.எஸ்.,களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும். புத்தாண்டு, பொங்கல், தீபாவளி காலங்களில் அனுப்பப்படும், எஸ்.எம்.எஸ்.,களுக்கு கட்டணத்தை உயர்த்தக் கூடாது என உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டது.
மனு நேற்று முன்தினம், விடுமுறை கால நீதிபதிகள் ராஜேஸ்வரன், விமலா பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. டிராய் தலைவர், பி.எஸ்.என்.எல்., மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பதிலளிக்க, நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். ஜன., 21க்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.

No comments:
Post a Comment