
ஊத்துக்குளி, ஏப். 12-
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி- திருப்பூர் செல்லும் வழியில் கொடியம்பாளையம் 4 ரோடு உள்ளது. இங்கு தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்று உள்ளது. இந்த நிறுவனத்தில் வடமாநிலத்தை சேர்ந்த 250 தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் அதே பகுதியில் குடிசை அமைத்து தங்கி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை ஒரு குடிசையில் யாரும் எதிர்பாராத விதத்தில் தீ பற்றியது. இந்த தீ மளமளவென மற்ற குடிசைகளுக்கும் பரவியது. இதனால் குடிசைக்குள் இருந்தவர்கள் பதறிப்போய் அலறியடித்துக்கொண்டு குடிசையை விட்டு வெளியே ஓடி வந்தனர். இந்த தீ விபத்து குறித்து திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தீயணைப்பு நிலைய அதிகாரி ராகவன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் 60 குடிசைகள் தீ விபத்தில் எரிந்து சாம்பலானது. போராடி தீ அணைக்கப்பட்டது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிய வருகிறது.இது குறித்து ஊத்துக்குளி போலீசார் விசாரணை நடத்திவருகிறார்கள்.