தமிழகத்துக்கு கூடுதலாக மின்சாரம் கேட்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் நிலவும் கடுமையான மின் தட்டுப்பாடு காரணமாக தமிழகத்துக்கு கூடுதலாக 1000 மெகா வாட் மின்சாரம் வழங்குமாறு ஏற்கனவே கோரிக்கை வைக்கப்பட்டது. எனினும், தமிழகத்துக்கு 100 மெகாவாட் மின்சாரம் மட்டுமே வழங்கப்பட்டது. அதிலும், பல்வேறு சிக்கல்கள் காரணமாக தமிழகத்துக்கு வெறும் 78 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிட்டுகிறது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை பொய்த்ததால், மின் தட்டுப்பாடு கடுமையாக உள்ளது. தொழில்நுட்பக் காரணங்களால் தமிழகத்தால் தென்பகுதிகளில் இருந்தும் மின்சாரம் பெற இயலாமல் உள்ளது. தற்போது தமிழகத்தில் தேவைக்கும், இருப்புக்கும் இடையே 4000 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறையாக உள்ளது. இதனால் பல்வேறு வகையில் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தென் மேற்கு பருவ மழையும் பொய்த்து, தற்போது மின்சாரமும் இல்லாததால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் உணவு உற்பத்தியும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், தாங்கள் தலையிட்டு, தமிழகத்துக்கு கூடுதலாக 1000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் வகையில் மின்சார சேவை கட்டமைப்புகளை மாற்றி அமைக்க உத்தரவிட்டு அதன் மூலம் தமிழகத்தின் மின் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
எனவே டெல்லி மின்சார வாரியத்தால், மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள மின்சாரத்தை, தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யுமாறு இந்த கடிதத்தின் வாயிலாக வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இதனால், கடுமையான மின் தட்டுப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தில் ஓரளவுக்கு நிலைமை சீரடைய வாய்ப்பு ஏற்படும் என்று வலியுறுத்துகிறேன் என்று ஜெயலலிதா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
