
கூரியர் கவர்களில் அம்மா ஸ்டிக்கர் ஒட்டப்படுமா?
தமிழக அரசு பஸ்களில், தனியார் மூலம் கூரியர் சேவை தொடங்கவுள்ளது. தமிழக விரைவு போக்குவரத்துக் கழகத்தின் வருவாயை அதிகரிக்கும் வகையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்களில், ஒரு நகரத்தில் இருந்து, மற்றொரு நகருக்கு அனுப்படும் கவர்களுக்கு, டிரைவர், கண்டக்டர்களே குறிப்பிட்ட தொகையை வசூல் செய்கின்றனர். அது மட்டுமின்றி, பஸ்களில் அனுப்பப்படும் பூக்கள் உள்ளிட்ட, பார்சலுக்கும் லக்கேஜ் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
அடுத்த கட்டமாக அரசு பஸ்களில், கூரியர் தபால் அனுப்பவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த உரிமை, வி.ஸ்பீடு லாகிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
அந்த நிறுவனம், விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு குறிப்பிட்ட தொகையை டிபாசிட்டாக செலுத்தி உள்ளது. அது மட்டுமின்றி, பஸ்களில் அனுப்பப்படும் பார்சலின் எண்ணிக்கைக்கு ஏற்ப, குறிப்பிட்ட தொகையை மாதந்தோறும் விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு செலுத்தும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த தனியார் நிறுவனம், சேலம், சென்னை கோயம்பேடு, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூரு, திருநெல்வேலி, ஈரோடு ஆகிய நகரங்களில் உள்ள பஸ் நிலையங்களில், அரசு விரைவு போக்குவரத்துக் கழக, டிக்கெட் புக்கிங் சென்டர்களின் அருகில், கூரியர் புக்கிங் சென்டர்களை அமைத்து வருகிறது. கூரியர் தபால்களை விரைந்து சப்ளை செய்யும் வகையில், அனைத்து நகரங்களிலும் அலுவலகங்களை தொடங்கவுள்ளது.
ஒரு நகரத்தில் இருந்து, மற்றொரு நகரத்துக்கு அனுப்பப்படும் கூரியர் பார்சல்கள் அனைத்தும், பஸ் நிலையங்களிலேயே இறக்கப்படும். அதன் பின், அந்த பார்சல்களை மற்றொரு வாகனத்தின் மூலம், நிறுவனத்தின் அலுவலகத்துக்கு எடுத்துச் சென்று பட்டுவாடா செய்யப்படும். காலையில் புக்கிங் செய்தால், அன்று மாலையிலேயே பார்சல்கள் கொண்டு சேர்க்கப்படும். பார்சலுக்கான கட்டணம் பிற நிறுவனங்களை விட, 40 முதல், 50 சதவீதம் வரை குறைவாகவே இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
பயணிகளுக்கு சிரமம் ஏற்படாத வகையில், அனைத்து பார்சல்களும் பஸ்சின் மேல்பகுதியிலும், வண்டியின் பின்புறம் உள்ள டிக்கியில் மட்டுமே ஏற்ற வேண்டும், என்ற நிபந்தனையுடன் தான் பார்சல் சேவையை அனுமதித்துள்ளதாக விரைவுப் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
பஸ்களில் பார்சல்களை ஏற்றுவது, இறக்குவது போன்ற பணிகளால் காலதாமதம் ஏற்பட்டு, பயண நேரம் அதிகரிக்குமா என்பது, போகப்போகதான் தெரியும்!
THANKS TO