புதுடில்லி: ஏர்டெல், வோடபோன் செல்போன் சேவை நிறுவனங்கள் கட்டணத்தை இரு மடங்கு அதிகரித்துள்ளன. ஒரு நிமிடத்துக்கு ஒரு ரூபாய் என்பது 2 ரூபாயாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. ஐடியா நிறுவனம், ஒரு நொடிக்கு 1.2 பைசா என்று இருந்ததை 2 பைசாவாக அதிகரித்து உள்ளது. செல்போன் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக இதுவரை கட்டணத்தை உயர்த்தாமலே இருந்தன. இந்த நிலையில் சமீபத்தில் மத்திய அரசு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் விட்ட பிறகு ரூ.23,000 கோடி கட்டணம் செலுத்தும்படி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது. மேலும் அதிகரித்து வரும் செலவால் செல்போன் நிறுவனங்களின் நிகர லாபம் தொடர்ந்து குறைந்து வருவதும் கட்டண உயர்வுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.செல்போன் சேவையில் இந்தியாவில் முதல் இடத்தில் இருக்கும் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் நிகர லாபகம் கடந்த மூன்றாண்டுகளாக வீழ்ச்சிக் கண்டுள்ளது. மார்ச் 1ம் தேதி முதல் இந்தியா முழுக்க ரோமிங் கட்டணத்தை ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அப்போது ஏற்படும் வருமான இழப்பை ஈடுகட்ட, இப்போதே செல்போன் நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தி இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
